1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 23 மே 2016 (15:48 IST)

யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் : விஜயகாந்த் கோரிக்கை

தேமுதிக படுதோல்வி அடைந்ததால் தொண்டர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என தேமுதிக விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது கொங்கராயலூரில் தேமுதிக கிளைச் செயலாளராக உள்ளார் சுப்பிரமணியன் (42).
 
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார். மேலும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.
 
இதனால், மனமுடைந்த சுப்பிரமணியன் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்த சுப்பிரமணியனுக்கு வீரம்மாள் என்ற மனைவியும், விஷ்ணு, திருமூர்த்தி ஆகிய இரு  மகன்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் கொங்கராயனூர் கிளைக்கழக செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தற்கொலை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தேமுதிகவின் தொண்டர்கள் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.
 
இதற்கு தற்கொலை ஒரு தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை முடிவுகளால் சம்பந்தப்பட்டவர்களின் மனைவி குழந்தைகள் எப்படிப்பட்ட பாதிப்புகளை அடைவார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால் நிச்சயமாக இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள். சுப்பிரமணியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இதுபோன்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்தக் காலத்திலும் ஈடுபட வேண்டாம்'' என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.