1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (02:52 IST)

மாடியில் இருந்து நாயை வீசிய மாணவர்களின் ஜாமீனை எதிர்த்து வழக்கு - பதிலளிக்க போலீசுக்கு உத்தரவு

மாடியில் இருந்து நாயை தூக்கிப்போட்ட மருத்துவ மாணவர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கில் குன்றத்தூர் காவல் துறையினர் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
நாகர்கோவிலைச் சேர்ந்த கவுதம் சுதர்சன், நெல்லையைச் சேர்ந்த ஆஷிஷ் பால் இருவரும் சென்னை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கீழ்க்கட்டளை பகுதியில் தங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் இவர்கள் ஒரு நாயை 4 வது மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளனர். மேலும், இந்த காட்சியை வீடியோ பதிவு செய்து பேஸ்புக் மற்றம் வாட்ஸ் அப்களில் கடந்த சில நாட்களாக உலா வந்தது.
 
இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், அவர்கள் இருவரையும் மருத்துவ சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 
இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர்.
 
இவர்களது விடுதலையை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் கவுரவ அதிகாரி அந்தோணி கிளெமெண்ட் ரூபின், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், ‘விலங்குகளை துன்புறுத்திய இவர்களுக்கு ஜாமீன் வழங்கியிருக்கக் கூடாது. எனவே, இவர்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யவேண்டும். நாய்க்கு ஆகும் மருத்துவ செலவை இவர்கள் இருவரும் ஏற்கவேண்டும் என உத்தரவிடவேண்டும்’ என கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் , ‘குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், மருத்துவ மாணவர்கள் கவுதம் சுதர்சன், ஆஷிஸ் பால் ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.
 
மேலும், இந்த வழக்கு இந்த ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், போலீசார் நடத்தும் புலன் விசாரணைக்கு அது தடை இருக்காது என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.