1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 12 மார்ச் 2016 (12:23 IST)

விஜயகாந்தின் தேமுதிக உடைகிறது?: கட்சியினரை நம்பவைத்து கழுத்தறுத்த விஜயகாந்த்

விஜயகாந்தின் தேமுதிக உடைகிறது?: கட்சியினரை நம்பவைத்து கழுத்தறுத்த விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்து போட்டியிட போவதாக அறிவித்த பின்னர் அவரது கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பத்து வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கும் விஜயகாந்தின் இந்த முடிவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


 
 
விஜயகாந்த் தனித்து போட்டி, அதிரடி முடிவு, கம்பீரமான முடிவு, தைரியமான முடிவு, இன்னும் ஏகப்பட்ட வீர வசனங்கள் போட்டு விஜயகாந்தின் இந்த முடிவை வர்ணிக்கலாம். ஆனல் இது தேமுதிகவுக்கும், கட்சியினருக்கும் பலன் அளிக்குமா? என்பது சந்தேகமே என்று கூட சொல்ல முடியாது. முற்றிலுமாக விஜயகாந்தின் இந்த முடிவு அவருக்கும் கட்சியினருக்கும் பலன் அளிக்க போவதில்லை.
 
இவ்வளவு நாள் தனித்து போட்டியிடுவேன் என்று நிலைப்பாட்டில் இல்லாமல், அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தார் விஜயகாந்த். திமுக பக்கம் நெருக்கம் காட்டி கட்சியினரையும், தொண்டர்களையும் உசுப்பேற்றினார். விஜயகாந்த் திமுக பக்கம் காட்டிய நெருக்கத்தை பார்த்து தான் தேமுதிக கட்சியினர் தேர்தலில் போட்டியிட இந்த அளவுக்கு விருப்பமனு அளித்தனர். தேர்தல் செலவுக்கு பல லட்சங்களையும் அளித்தனர்.


 
 
ஆனால் தனித்து போட்டி என்ற அறிவிப்பால், விருப்பமனு அளித்து, பல லட்சங்களை கட்டியவர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்படி சொந்த கட்சியினரையே நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார் விஜயகாந்த் என பணம் கட்டிய பலர் புலம்பி வருகின்றனர். விஜயகாந்த் கட்சியினர் தேர்தலில் போட்டியிட கிட்டத்தட்ட 4000 பேர் விருப்பமனு அளித்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் கட்சியின் பலத்தை மட்டுமே நம்பி விருப்பமனு அளிக்கவில்லை, திமுக கூட்டணியில் விஜயகாந்த் செல்வார், திமுகவின் துணையோடு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் தான் விருப்பமனு அளித்தனர் என்பதே நிதர்சனமான உண்மை.
 
விஜயகாந்தின் இந்த தனித்து போட்டி என்ற முடிவால் அவரது கட்சியின் பல நிர்வாகிகள் கட்சி தாவ கூட தயாராக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பல மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களை தங்கள் பக்கம் இழுக்க சூரிய கட்சி முயற்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஒட்டுமொத்த கட்சியினரின் விருப்பத்திற்கும் மாறாக முடிவெடுத்து தன் கட்சி உடைவதற்கு தானே வழிவகுத்துள்ளார் விஜயகாந்த்.