தினந்தோறும் ஷூட்டிங் தானா? எப்போதுதான் மக்களைப் பற்றி சிந்திப்பீர்கள்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
ரீல்ஸ் வீடியோ செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு போட்டியாக தினமும் ரீல்ஸ் வீடியோவை போட்டுக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் எப்போதுதான் தமிழக மக்களை குறித்து யோசிப்பீர்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்புயுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?
மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?
Edited by Mahendran