1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (17:21 IST)

ராம்குமாரை மூன்று நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

குற்றவாளியை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு நேற்று புழல் சிறையில் நீதிபதி சங்கர் முன்னிலையில் நடந்தது. இதில் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தின் பெட்டிக்கடைக்காரர் சிவக்குமார் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.

இதில், சுவாதியின் தந்தை ராம்குமார்தான் குற்றவாளி என அடையாளம் காட்டியதாய் கூறப்படுகிறது. இதில் சிவகுமார், அந்த கொலையாளி பார்ப்பதற்கு ராம்குமார் போலத்தான் இருந்தான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், அவரை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தின் மனு அளித்திருந்தனர். அந்த வழக்கு இன்று சென்னை பெருநகர 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனால், ராம்குமாரை இன்று மதியம், சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ராம்குமாரை மூன்று நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். போலீஸ் விசாரணையில் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.