செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (16:11 IST)

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40-வது முறையாக நீட்டிப்பு.!

Senthil Balaji
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 25ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 
 
தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவடைந்தது.
 
இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூன் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் 40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய மனு தாக்கல்:

இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து அமலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.