1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2017 (11:40 IST)

ராட்சத கருவி மூலம் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது!

ராட்சத கருவி மூலம் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது!

சென்னை தி நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கப்படும் பணி தற்போது தொடங்கியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று முன்தினம் காலை 4 மணியளிவில் தீ பற்றியது.


 
 
முதலில் அடித்தளத்தில் பற்றிய தீ, படிப்படியாக மற்ற 6 தளங்களுக்கும் பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்ததால், தீயணைப்பு வீரர்களால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியவில்லை. எனவே, ரசாயணப் பவுடர் மூலம் தீயை அணைக்க முயன்றனர். அதில் சற்று தீயின் தாக்கம் குறைந்தாலும், கடையின் உள்ளே ஏராளமான துணிகள் அனைத்தும் எரிய தொடங்கியதால், தீ மேலும் பரவி, கொளுந்து விட்டு எரிந்தது.
 
தீயை அணைப்பதற்கு 60 லாரி தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தினர். இந்த தீ விபத்தின் காரணமாக, இந்த பகுதி முழுவதும் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டது. அருகிலிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 7-வது மாடி முதல் 2-வது மாடி வரை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனையடுத்து நேற்று காலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்டிடத்தை ஆய்வு செய்தார். இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் தனது ஸ்திரத்தன்மையை இழந்து விட்டதால், அதை இடிக்க முடிவு அரசு முடிவு செய்தது.
 
இதனையடுத்து சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. கட்டிடத்தை இடிக்க இரண்டு ராட்சத ஜா கட்டர் வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் யாரும் கட்டிடத்தின் அருகில் வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அனைவரும் தூரத்தில் இருந்தவாறே இடிக்கும் பணியை கண்காணிக்கின்றனர். இன்னும் 3 நாட்களுக்குள் கட்டிடம் தரை மட்டமாக்கப்படும். மேலும், அதற்கான செலவுகள் அனைத்தையும் கட்டிட உரிமையாளரிடமே பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.