1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (12:40 IST)

சிறை கைதிகளின் பிரியாணியை இனி ஆன்லைனிலும் வாங்கலாம்…

கோவை மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணியை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, சிறை பஜார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிறை கைதிகள் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சிறை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் 1,850 கைதிகளும், பெண்கள் 40 கைதிகளும் உள்ள நிலையில், இவர்களின் நன்னடத்தையை அடிப்படையாக கொண்டு கைதிகள், சிறை பஜார் வேலைகளில் பணியமர்த்தப்பட்டனர்.

கோவை காந்திபுரம் மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் சிறை பஜாரில் காலை இட்லி, பொங்கல், பூரி, கிச்சடி, போன்ற உணவுகளும், மதியம் சாப்பாடு, தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர்சாதம், பிரியாணி போன்ற உணவுகளும், இரவு இட்லி, தோசை போன்ற உணவுகளும் தயாரிக்கின்றனர்.

மேலும் இங்கு பேக்கரி பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனைகளை மேம்படுத்த, ஆன்லைனில் விற்பனை செய்யவிருப்பதாக சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து கோவை மத்திய சிறையின் ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், ஆன்லைனில் உணவு பொருட்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகமாகி வருவதால், சிறை கைதிகள் தயாரிக்கும் உணவுகளையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல ஆன்லைன் உணவு நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம் எனவும் கூறினார்.