1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (15:36 IST)

பாஜக மாவட்ட தலைவர் கைது.! திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்..!!

ஜனநாயக விரோத ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 
அனுமதி இன்றி கட்சிக் கொடி கம்பம் நட்டு, கொடியேற்றியதாக பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், கட்சிக் கொடியேற்றியதற்காக, பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் செல்வராஜ், திமுக அரசின் தூண்டுதலால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது, தமிழகத்தில் திமுக எத்தனை ஜனநாயக விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் குற்றச் செயல்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைக் கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் திறனற்ற திமுக, தனது சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைக்க, பாஜகவினரைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 
 
திமுகவின் இந்த எதேச்சதிகாரப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை திமுக உணர்ந்திருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.