1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜூலை 2019 (08:38 IST)

காமம், பெண் பித்து, ஜோதிடம்... சரவண பவன் ராஜகோபாலை கவிழ்த்துப் போட்டது எது?

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலை கவிழ்த்துப் போட்டது எதுவென பல கருத்துக்கள் வெளியாகி வருகிறது. அவற்றில் கவனம் பெற்ற ஒன்று இதோ... 
 
சரவண பவன் ராஜகோபாலின் பெண்ணாசையே அவரின் இந்த சோக முடிவுக்குக் காரணம் என்று பரவலான கருத்து இருந்து வரும் நிலையில், உண்மையில் அவர் வீழ்ந்ததற்கான காரணம் என்னவென்பதை ஊடகவியலாளரும் வளர்தொழில் இதழின் ஆசிரியருமான ஜெயகிருஷ்ணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது பலரின் கவனத்தை பெற்றுள்ளது. 
 
அவர் பதிவிட்டதாவது, திருமதி. வள்ளியம்மை அவர்களை அவர் பெயருக்காகவே விரும்பி திருமணம் செய்து கொண்டவர், மறைந்த அண்ணாச்சி திரு. ராஜகோபால். சென்னை, அசோக் நகரில் மளிகைக் கடை வைத்து இருந்த இவர் உணவகத் தொழிலில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். 
வழக்கம் போல் தமிழர்கள் பெரிய வெற்றி அடைந்த பிறகு, நாம் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டோமா என்று தன் வெற்றியையே பார்த்து அஞ்சுவதைப் போல இவரும் அஞ்சினார். இன்னும் தீவீர பக்தராக மாறினார். கோயில்களுக்கு வாரி வழங்கினார். 
 
கார்த்திகை நட்சத்திரம் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டால், இன்னும் பெரிய ஆளாகலாம் என்று பரிகாரம் சொன்ன ஜோசியர்களை நம்பி அப்படிப்பட்ட பெண்களைத் தேடி திருமணம் செய்து கொள்ள முயற்சித்தார். 
அப்படி திருமணம் செய்து கொண்ட ஒருவர் பிராமணப் பெண். இந்த பெண் கூட இன்னொருவரின் மனைவி. அடுத்து ஜோசியர்களின் கணிப்பை உண்மை என்று நம்பி அப்படிப்பட்ட இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து மாட்டிக் கொண்டார். அவரும் இன்னொருவர் மனைவி. இவர்கள் ஜாதகங்களைப் பார்த்து தேர்ந்து எடுத்துக் கொடுத்தவர்கள், அவர் நம்பிய ஜோசியர்கள்.
 
காமம் மட்டுமே அவரது நோக்கமாக இருந்தால் அதற்கு வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. இவரிடம் இருக்கும் பணத்துக்கு வெளியே தெரியாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்திருக்கலாம். வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம். இவரிடம் இருந்த ஜோசியப் பித்து காரணமாகவே இவர் இப்படி வீணாகப் போனார். 
திரு.ராஜகோபால் கடுமையான, நேர்த்தியான உழைப்பாளிதான். அதை மறுக்க முடியாது. ஆனால் இவரை கவிழ்த்துப் போட்டது, அளவு கடந்த ஆன்மிகமும், ஜோசியமும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. 
 
என்ன பரிகார பூஜைகள் பண்ணி என்ன பயன்? இவை எல்லாம் பயன் அற்றவை என்பதை தன் வாழ்வின் மூலம் உறுதிப்படுத்தி விட்டு மறைந்து இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.