வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (18:25 IST)

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பள்ளிகள் மட்டுமன்றி கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் உண்டா இல்லையா என்பது குறித்த தீர்க்கமான முடிவு இன்னும் வெளிவரவில்லை. இதனால் கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால் அடுத்ததாக கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
நேற்று முதல் பொறியியல் கல்லூரிகளில் படிக்க பதிவு செய்யலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் கூறியதை அடுத்து நேற்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பொறியியல் கல்லூரி படிப்பிற்காக விண்ணப்பித்து வருகின்றனர் 
 
மேலும் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என்றும் சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமே சரி பார்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது