1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (08:38 IST)

பாமக போட்டியிடும் தொகுதியில் பாஜகவுக்கு ஓட்டு கேட்ட பிரமுகர்! அதிர்ச்சியில் அமைச்சர்

தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி மாறி ஓட்டு கேட்பது, சின்னம் மாறி ஓட்டு கேட்பது போன்ற கூத்துக்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு ஓட்டு கேட்பதற்கு பதில் பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க ஒரு பிரமுகர் கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது
 
திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமுத்து நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரத்தை தொடங்கினார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட பாஜக, பாமக, அதிமுக பிரமுகர்கள் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டனர்.
 
அப்போது ஒரு வாக்காளரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் பாமகவின் மாங்கனி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதற்கு பதில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கூறினார். இதனைக்கேட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக பிரமுகர் என்றும் பாராமல் அவரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டியதால் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.