1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (23:31 IST)

தோசை சுட்டு வாக்குகள் சேகரித்த நடிகை குஷ்பு....மக்கள் ஆச்சர்யம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து, பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். 
 
பாஜகவில் இணைந்த குஷ்பு முதன் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளதும், திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் எழிலனை எதிர்த்து போட்டியிடுவதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்தே நாள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 
 
ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வரும் குஷ்புவை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்களோடும் சிறப்பாக வரவேற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், பெண்கள் ஆகியோரது ஆதரவும் குஷ்புவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘வாக்களியுங்கள் தாமரைக்கு, வாய்ப்பளியுங்கள் உங்கள் சகோதரிக்கு’என கடும் வெயிலையும், கொரோனா தொற்றையும் கூட பொருட்படுத்தாமல் வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் குஷ்பு. 
 
தற்போதைய அரசியல் களத்தில் வேட்பாளர்கள் பலவிதமாக வாக்கு சேகரிப்பதைப் போலவே, குஷ்புவும் முதன் முறையாக உணவகம் ஒன்றில் தோசை சுட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குஷ்பு, தெற்கு மாடவீதியில் உள்ள சாலையோர உணவகம் ஒன்றில் மொறு, மொறு தோசை சுட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல வருட அனுபவம் வாய்ந்த தோசை மாஸ்டர்களையே பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு சுடான கல்லில் தண்ணீர் தெளித்து, அளவாக மாவை எடுத்து மொறு, மொறுவென குஷ்பு தோசை சுட்டதை அப்பகுதி மக்கள் ஆவலுடன் கண்டு ரசித்தனர்.