1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (12:35 IST)

வேகமாக வந்த பேருந்து மோதி இளைஞர், குழந்தை பரிதாப பலி! – பெரியநாயக்கன் பாளையத்தில் சோகம்!

Accident
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 9ம் தேதி நடந்த சாலை விபத்தில் 3 வயது குழந்தை மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 
கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார்(32). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கடந்த 9ம் தேதி மாலை கேஸ் கம்பெனியில் உள்ள தங்களது வீட்டில் இருந்து  இருசக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் வாகனம் வித்யாலய மாற்றுத்திறனாளிகள் மையம் பகுதியில் வந்தபோது பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இவர்கள் பின்னால் மீது மோதியது. இதில் அசோக்குமாரும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்குள் தனியார் பேருந்திலிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.

 
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுசீலாவை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் தற்பொழுது அந்த பேருந்திற்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதற்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர்கள் திடீரென வலது புறத்திலிருந்து இடதுபுறம் தெற்கு கடந்ததும் பேருந்து பின்னால் வந்ததைக் கொண்டு உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் பேருந்தும் மோதியதும் பதிவாகியுள்ளது.

தற்பொழுது இந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.