1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:19 IST)

கிளாம்பாக்கத்தால் சென்னையின் நுழைவு வாயிலில் தலைகீழ் மாற்றம்! - முக்கியமான இடமாக மாறிய பொத்தேரி!

Kilambakkam
சென்னை: கிளாம்பாக்கத்தால் சென்னையின் நுழைவு வாயிலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வருவோருக்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வோருக்கும் முக்கியமான இடமாக பொத்தேரி மாறி உள்ளது. ஏன் அப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.


 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம்  (டிசம்பர் 31) முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் சென்னையை நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் இன்று கிளாம்பாக்கம் நிலையத்தை வந்தடைந்தன.

சென்னைக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்று விரும்புவோர் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாற முடியாது என்பதால், பேருந்தில் வந்த பயணிகளை, பஸ் கண்டக்டர்கள் பொத்தேரியில் இறக்கிவிட்டனர். பொத்தேரியில் இறங்கிய பயணிகள் ரயில்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்கு சென்றனர். முன்பு பெருங்களத்தூர் அல்லது தாம்பரத்தில் இறக்கிவிட்ட போது, ரயிலில் ஏறி மாறி சென்றார்கள். அதுபோல் முக்கியமான இடமாக இப்போது பொத்தேரி மாறி உள்ளது.

ஏன் பொத்தேரி இப்படியானது?

சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும்.


Potheri

 
விடை காணாமலே விடைபெறும் கோயம்பேடு..15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது ஏன்?

அதேநேரம் பொத்தேரி ரயில் நிலையத்தை பொறுத்தவரை மெயின்ரோட்டை ஒட்டியே இருப்பதால் எளிதாக அங்கு இறங்கி, இனி சென்னைக்கு போய்விட முடியும். அதேபோல் இன்னொரு சிறப்பு அம்சமும் இருக்கிறது. பேருந்துகளில் ஏறுபவர்களும் புக்கிங் செய்திருந்தால், கிளாம்பாக்கம் போய் ஏற வேண்டிய அவசியம்.. பொத்தேரி வரை புறநகர் ரயிலில் போய், அங்கிருந்து பேருந்துகளில் எளிதாக ஏற முடியும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வரும் வரை மாற்றாக இதை பயன்படுத்தமுடியும். இதன் மூலம் பொத்தேரி ரயில் நிலையம் தான் சென்னையின் நுழைவு வாயிலாக உருவெடுத்துள்ளது. அரசு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்தாலும், ரயிலில் வருவோருக்கும், ரயிலில் செல்வோருக்கும், பொத்தேரி முக்கியமான இடமாக மாறுகிறது.

வரும் பொங்கல் பண்டிகையின் போது பொத்தேரி ரயில் நிலையம் வந்து அப்படியே ரயிலில் இறங்கி, பேருந்துகளில் மக்கள் ஏறுவார்கள் என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். காலை முதல் இரவு வரை அதிகப்படியான புறநகர் ரயில்களை இயக்குவதே ஓரே தீர்வாக இருக்கும். தெற்கு ரயில்வே, பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை கூடிய விரைவில் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிளாம்பாக்கம் எப்படி இருக்கிறது?


 
சென்னை - திருச்சி நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து விரைவு பேருந்துகளும் ஞாயிறு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதன்படி, திருச்சி, மதுரை,நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்காவிளை, தென்காசி, செங்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன கும்பகோணம், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இதர போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோயம்பேட்டில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால் கோயம்பேடு வெறிச்சோடிவிடும். இதனிடையே

பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்களை 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என சிஎம்டிஏ அறிவித்துள்ளது.