1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (00:24 IST)

400 சிலைகளுடன் கூடிய 3 சிலை கூடத்திற்கு சீல் வைப்பு.

Vinayagar Chaturthi
கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பூட்டி சீல் வைத்ததால் பரபரப்பு - 400 சிலைகளுடன் கூடிய 3 சிலை கூடத்திற்கு சீல் வைப்பு.
 
வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. வீடு மற்றும் பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
 
இதற்காக, கரூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிலை தயாரிப்பு கூடத்தில் சுமார் 400 விநாயகர் சிலைகள் தயார் நிலையில் இருந்தது.
 
இன்று திடீரென்று சோதனை மேற்கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்கு சீல் வைத்தனர்.
 
சிலை தயாரிப்பு விதிகளை மீறி பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற கெமிக்கல் கலவை கலந்து சிலை தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் சிலை தயாரிப்பு கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது.
 
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
 
விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கும் தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.