1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (15:17 IST)

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

highcourt
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்துள்ளது.  
 
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், கள்ளச்சாராய பலி சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். மேலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
 
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கபட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 
விஷ சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமும் சிகிச்சை பெற்று வருவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டது. உடனடியாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை மூன்று வழக்கு பதிவு செய்துள்ளது. 
 
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு ஏடிஜிபி பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சென்னை உயர் மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  கள்ளசாராயத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை அளக்க அந்த ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது. 

இதுவரை சிபிசிஐடி காவல்துறை 132 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிபிசிஐடியின் 6 குழுக்கள் விசாரித்து வருகின்றது. விசாரணை விரிவாகவும் துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு டிஜிபி தலைமையில் அனைத்து உயர் =காவல்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையை கண்காணித்து வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற விஷச் சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். 
 
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில் 99 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது கள்ளக்குறிச்சியில் கைப்பற்றப்பட்ட விஷ சாராயத்தில் 8.6 முதல் 29.7 வரை மெத்தனால் கலந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்களின் தொடர்ச்சி என சொல்ல முடியாது. கள்ளக்குறிச்சி சம்பவம் தனி சம்பவம். கள்ளச்சாராய புகார்கள் தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு வாட்ஸ் அப் குழுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மெத்தனால் கண்காணிக்கபடுகிறது. கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது. அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து வருவதாகவும். சட்டமன்றத்தில் விவாதிக்க கோரிய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்கவில்லை. 
 
மாநில அரசு இந்த சம்பவம் குறித்து கவனமாக விசாரித்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கி உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனவும் சில அரிதான அல்லது விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணை பேர் முடியும். 
 
இந்த வழக்கில் 10 மேற்பட்ட நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் விசாரணை சரியான முறையில் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும் கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அதிகரித்து இருப்பதாகவும், இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அறக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு இதுவரை 65 பேர் மரணம் அடைந்துள்ளனர் 145 சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

 
இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி மிகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.