வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வியாழன், 21 ஜூலை 2016 (19:01 IST)

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 15 வது நினைவு நாள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 15 வது நினைவு நாள்

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகர் எனப் புகழப்படும் சிவாஜி கணேசனின் 13 வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.


 


அக்டோபர் 1, 1927-ஆம் ஆண்டு பிறந்த இணையில்லா நடிகரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் மரணத்தைத் தழுவினார். அவரது நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், அவரை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. சிவாஜி கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், ஒன்பது தெலுங்கு, இரண்டு ஹிந்தி மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு.

பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை. சிவாஜி கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா, மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு. மகள்கள் சாந்தி மற்றும் தேன்மொழி.

1955-ஆம் ஆண்டு வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987-ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கினார்.

எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். அவர், கலைமாமணி, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர், தாதாசாகெப் பால்கே போன்ற விருதுகளை பெற்றுள்ளார். மேலும், 1962-ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் நகரத்தந்தையாகக் கௌரவிக்கப்பட்டார். ஜூலை 21, 2011- ஆம் ஆண்டு, சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்கப்பட்டது.