1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (13:05 IST)

முழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் கொண்ட கரிசலாங்கண்ணி !!

கரிசலாங்கண்ணி சாற்றை வாய் கொப்பளித்து வர பற்களும் ஈறுகளும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார்.


கரிசலாங்கண்ணி முழுத்தாவரம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கரிசலாங்கண்ணி சிறு செடி வகையைச் சார்ந்தது. மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டுவர வேண்டும்.

இலைகள், எதிரெதிராக அமைந்தவை. அகலத்தில் குறுகியவை, நீண்டவை, சொரசொரப்பானவை. மலர்கள், சிறியவை, வெண்மையானவை, சூரியகாந்தி மலர் போன்ற தோற்றம் கொண்டவை. கிளைகளின் நுனியில் காணப்படும்.

வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள், ஆற்றங்கரைகளில் கரிசலாங்கண்ணி களைச்செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் கரிசாலைக்கு உள்ளது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

மஞ்சள் காமாலை தீர பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து, பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு, ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். இதனால் கண் பார்வை தெளிவடையும்.