வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கஸ்தூரி மஞ்சளில் நிறைந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள்...!!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. சாதரன மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில்  பொலிவு ஏற்படும். முகப் பருக்கள் தேமல்கள் ஆகியவை வராது.
கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்கவேண்டும். இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.
 
பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான்  புண்கள் விரைவில் குணமாகும்.
 
கஸ்தூரி மஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை  தினமும் செய்து வர வேண்டும்.
 
கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப்  பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும்.
கஸ்தூரி மஞ்சள் ஒரு அற்புதமான அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இயற்கை சீர்குலைவால் சருமத்தில் அதிக உற்பத்தியாகும் தீங்கு  விளைவிக்கும் கூறுகளிடமிருந்து சருமத்தை பாதுகாக்க அன்டி ஆக்சிடென்ட் உதவி புரிகிறது.
 
முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம்  கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்யலாம்.
 
பருக்கள் மற்றும் கட்டிகளால் உண்டாகும் தழும்புகள் நீண்ட காலம் நீடித்து நிற்கின்றன. கஸ்தூரி மஞ்சள் இந்த தழும்புகளைக் குறைக்கவும், போக்கவும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த மஞ்சளை பயன்படுத்துவதால் இந்த தழும்புகள் மறைகிறது.