செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வெற்றிலை...?

அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டும் வெற்றிலை, உடலில் வெப்பத்தை தருவதோடு தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆடும் பற்களை கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை  பலப்படுத்துகிறது.
 
வெற்றிலை நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டுகிறது. மேலும், வெற்றிலையை அளவோடு எடுத்துக்கொண்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
 
விதைப் பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதக் கோளாறுகளுக்கு வெற்றிலையினை அரைத்து கட்டாக கட்டி வந்தால், நல்ல பயன் கிடைக்கும்.
 
வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
 
மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக வெற்றிலை வைக்கிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும்,  தேவையான அளவு கலந்து பருகினால் சிறுநீர் நன்கு வெளியேறும்.
 
வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். ஈரத்தால் வரும் தலைவலிக்கு  வெற்றிலையை சூடுபடுத்தி நெற்றியில் வைத்தால், வலி நீங்கும்.
 
துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலை மாலை என இரு வேலைகள் குடித்து  வர, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும்.