1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 16 மே 2014 (10:19 IST)

பாஜக தலைவர்களுக்கு தேர்தல் முடிவுக்கு முன்பே அதிகாரப்பசி வந்துவிட்டது - லாலு

பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தருவீர்களா? என்று கேள்வி கேட்ட நிருபரிடம், ‘‘என்னுடைய அரசியல் பின்னணி பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?’’ என்று லாலு பிரசாத் யாதவ் ஆவேசமாக கேட்டார்.
 
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கட்சி பாஜ கூட்டணியில் இருந்து விலகி தனியாக மக்களவை தேர்தலை சந்தித்தது. ஐமு கூட்டணியில் இருந்த ராம் விலாஸ் பஸ்வான், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. பாஜக கூட்டணிக்கு அதிக இடங்களும், அதற்கு அடுத்தபடியாக லாலு பிரசாத்துக்கும், நிதிஷ்குமாருக்கு கடைசி இடமும் கிடைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவையும் பெற பாஜக முயன்று வருகிறது. 
 
இந்நிலையில், பாட்னாவில் நேற்று முன்தினம் லாலுவிடம், ‘தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணி ஆட்சியமைக்க ஆதரவு தருவீர்களா?’ என நிருபர் ஒருவர் கேட்டார். இதை கேட்டதும் லாலுக்கு கோபம் கொப்பளித்தது. ‘நீ எப்போது பிறந்தாய்? என்னுடைய அரசியல் பின்னணி என்ன? நான் எந்த உலோகத்தில் உருவாக்கப்பட்டவன் என்பதெல்லாம் உனக்கு தெரியுமா? நிதிஷ் குமார், பஸ்வான் போல நான் இல்லை. நான் 77 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இப்போது நடப்பது போன்ற சம்பவங்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பாஜக தலைவர்களால் காத்திருக்க முடியவில்லை. அதற்குள் யார் யாருக்கு என்னென்ன பதவி என முடிவு செய்ய தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிகாரப்பசி வந்து விட்டது என்று நிருபரிடம் எரிந்து விழுந்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com

LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results