1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (13:20 IST)

ஹெலிகாப்டர் விபத்து - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுவது என்ன?

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பேசினார். 

 
நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பிறநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக இரு அவைகளிலும் குன்னூர் விபத்தில் இறந்த 13 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மாநிலங்களவையில் அவைத் துணைத் தலைவர் ஹர்வன் சிங்கும் இரங்கல் செய்தியை வாசித்தனர்.
விபத்து தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பேசியது பின்வருமாறு... நேற்று காலை 9 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிபின் ராவத் சூலூர் கிளம்பினார். பிபின் ராவத் சென்ற விமானம் 11:35 மணியளவில் சூலூர் விமானப்படைத் தளத்தில் இறங்கியது.

11: 48 மணிக்கு விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மூலம் பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் கிளம்பினர். எம்.ஐ.17வி-5 ஹெலிகாப்டர் உடனான தொடர்பு 12 மணி 8 நிமிடத்திற்கு துண்டித்தது. இந்த ஹெலிகாப்டர் 12:15 மணிக்கு வெலிங்டன் சென்றடைந்து இருக்க வேண்டும். தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
 
விபத்தில் சிக்கிய க்ரூப் கேப்டன் வருண் சிங் உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். முப்படைகளின் மரியாதையுடன் பிபின் ராவத்தின் உடல் நாளை தகனம் செய்யப்படும் என தெரிவித்தார்.