வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 14 மார்ச் 2015 (10:40 IST)

முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு சச்சின் டெண்டுல்கர் கடிதம்

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் சுங்க சாவடிகளில் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் டெண்டுகர் கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:–
 
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் சுங்க சாவடிகளில் வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக கார்கர், தகிசர், ஐரோலி பாலம், முல்லுண்டு கிழக்கு நெடுஞ்சாலை, முல்லுண்டு எல்.பி.எஸ். மார்க், கோட்பந்தர், தலோஜா, டோம்பிவிலி ஆகிய பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
 
இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சுங்க சாவடிகளில் கட்டணத்தை வசூல் செய்வதில் புதிய முறை ஏதேனும் ஒன்றை அறிமுகப்படுத்தி அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் வீணாகிறது. சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். வாகன ஓட்டிகளின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
மேலும், சுங்க சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் போது ஆம்புலன்சுகள்கூட கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சுங்க சாவடிகளில் ஆம்புலன்சுகள் செல்ல தனி பாதை அமைக்கப்பட வேண்டும். சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் பகுதிகளில் உள்ள சாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில், இந்தக் கடிதத்தை போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
 
இது குறித்து, செய்தியாளர்கள் சந்திரகாந்த் பாட்டீலிடம் கேட்டபோது, "சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனைகளை பரிசீலித்து, வாகன ஓட்டிகளின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.