1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:25 IST)

உண்டியலில் குவிந்த ரோலக்ஸ், டைட்டன் வாட்ச்கள்! – ஏலத்தில் விட தேவஸ்தானம் முடிவு!

திருப்பதி தேவஸ்தான உண்டியலில் காணிக்கையாக அளிக்கப்பட்ட விலை உயர்ந்த கடிகாரங்களை ஏலத்தில் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக சென்ற வண்ணம் உள்ளனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காணிக்கை உண்டியலில் பணம் மட்டுமல்லாது வெளிநாட்டு பணம், நகைகள், விலை உயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்டவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருப்பதி உண்டியலில் குவிந்த வெளிநாட்டு நாணயங்கள் ஏலத்தில் விடப்பட்டன. அதுபோல தற்போது திருப்பதி தேவஸ்தான காணிக்கை உண்டியலில் சொனாடா, டைட்டன், ரோலக்ஸ், ஃபாஸ்ட்ராக் உள்ளிட்ட பல்வேறு பிராண்டட் வாட்ச்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.

சில வாட்ச்கள் புதியதாகவும், சில கொஞ்சம் பழையதாகவும், சிறிதாக கீறல்கள் கொண்டதுமாக மொத்தம் 22 வாட்ச்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த வாட்ச்களை மின்னணு முறையில் ஏலத்தில் விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த ஏலம் குறித்த விவரங்களை திருப்பதி தேவஸ்தான மார்கெட்டிங் அலுவலக எண்ணான 0877-2264429 என்ற எண்ணிலோ அல்லது தேவஸ்தான இணையதளம் www.tirumala.org என்ற தளத்திலும் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.