1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (04:28 IST)

மருத்துவ நுழைவு தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி - மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

மருத்துவ நுழைவு தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி - மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

மருத்துவ நுழைவு தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மருத்துவ கல்வியில் சேருவதற்கு அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
 
கூட்டாட்சி என்று ஒருபுறம் கூறிக் கொண்டு இன்னொரு புறம் இது போன்ற மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலில் மத்தியில் உள்ள பாஜக அரசு திட்டமிட்டு ஈடுபடுவது வேதனைக்குரியது.
 
ஏற்கனவே இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு போட்டது செல்லாது என்றும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
ஆனாலும் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று அந்த தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்து இப்படி ஒரு தீர்ப்பை பெற்றுள்ளது இந்திய மருத்துவ கவுன்சில். மாநிலங்களின் உரிமையை பறிக்கும் இந்த அடாவடிச் செயலுக்கு மத்திய அரசும் கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்கியது மத்திய மாநில உறவுகளை மேம்படுத்துவதில் மத்தியில் உள்ள பா ஜ க அரசுக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்தது துரதிருஷ்டமானது.
 
அதிமுக அரசும் இந்த விஷயத்தில் எந்த விதமான அழுத்தமும் மத்திய அரசுக்கு கொடுக்காமல் இருந்து விட்டது அதை விட கொடுமையானது. கழக அரசு 2007 ஆம் வருடமே தமிழகத்தில் இது போன்ற மருத்துவ கல்வியில் சேருவதற்கான நுழைவு தேர்வை ரத்து செய்தது என்பதை நினைவு கூறும் அதே நேரத்தில் மத்திய அரசு அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்தும் முடிவை கிராமப்புற மாணவர்களின் நலனையும், சமூகநீதிக் கொள்கை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனையும் மனதில் கொண்டு கண்டிப்பாக கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.