வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (15:49 IST)

பிரதமருடன் உரையாடிய சுந்தர் பிச்சை! – இந்தியாவில் கூகிள் 10 பில்லியன் முதலீடு!

பிரதமர் மோடியுடன் கூகிள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை கலந்துரையாடிய நிலையில் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாய் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் கூகிள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு பின்னர் பேசிய பிரதமர் மோடி “கூகிள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையுடனான உரையாடல் சுவாரஸ்யமாக அமைந்தது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகிளின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை “இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகிள் சார்பில் 10 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.75000 கோடி) முதலீடு செய்யப்படும். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவ கூகிள் இந்தியா சார்பில் இந்த தொகை வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரயில் நிலையங்களில் இலவச இணையம் அளிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் கூகிள் நிறுவனம் அரசுடன் இணைந்து சேவைகளை அளித்து வந்தது. தற்போது சீனாவுடனான தொடர்பில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சிகளில் கூகிள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.