1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 19 மார்ச் 2015 (19:52 IST)

சோனியா, மன்மோகன் உட்பட மின்கட்டணம், வரி கட்டாத 300 விஐபிகள் பட்டியல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 300 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தாதோர் பட்டியலில் உள்ளதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்தது.
 
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 
சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கெளடா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் பிரசாத் நிஷாத், எல்.கே.அத்வானி, திக்விஜய் சிங், ஜெகதீஷ் டைட்லர் உள்பட 166 மக்களவை உறுப்பினர்களும்,
 
151 மாநிலங்களவை உறுப்பினர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தாமல் உள்ளனர்.
 
நிஷாத் ரூ.18.47 லட்சமும், தேவ கெளடா ரூ.1.49 லட்சமும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ.1.27 லட்சமும் வரி பாக்கி செலுத்தாமல் உள்ளதால் இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
 
மன்மோகன் சிங் ரூ.22,934 ம், அத்வானி ரூ.3,311 ம், ஸ்மிருதி இரானி ரூ.12,934 ம், நஜ்மா ஹெப்துல்லா ரூ.1,627 ம் வரி பாக்கி வைத்துள்ளனர்.
 
சோனியா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மிகக் குறைவான தொகையாக முறையே ரூ.193, ரூ.206 வரி பாக்கி வைத்துள்ளனர்.
 
இந்த நிலுவைத் தொகைகளை செலுத்தக் கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி. கட்டணம் செலுத்தாத மேற்கண்ட பிரபலங்களின் வீடுகளுக்கான மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.