வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மார்ச் 2021 (10:29 IST)

பிரதமர் மோடி பேசுனதை முழுசா கேட்கலை! – தானாக மன்னிப்பு கேட்ட சசி தரூர்!

வங்கதேசத்தில் பிரஹமர் மோடி பேசியது குறித்து கிண்டலாக ட்வீட் செய்திருந்த சசி தரூர் தற்போது தானாக முன் வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் வங்க தேச விடுதலைக்காக போராடிய இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்துவதாக கூறியதுடன், தன்னுடைய 22வது வயதில் வங்க தேச விடுதலைக்காக சத்தியாகிரக போராட்டத்தில் தான் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சை கிண்டலடித்து பதிவிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் “பிரதமர் மோடி இந்திய போலி செய்திகளை வங்காளத்தில் சொல்கிறார். வங்க தேசத்திற்கு சுதந்திரம் வாங்கி தந்தவர் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்” என கூறியிருந்தார்.

வங்க தேசத்திற்கு சுதந்திரம் பெற்று தர முக்கிய காரணமாக இருந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பற்றி பிரதமர் மோடி குறிப்பிடவில்லை என்ற அர்த்ததில் சசி தரூர் அப்படி பேசியிருந்தார். ஆனால் அன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி இந்திரா காந்தி குறித்தும் பேசியிருந்தார்.

இதை பின்னர் அறிந்துக் கொண்ட சசிதரூர், பிரதமர் உரையை முழுவதுமாக கேட்காமல் கிண்டலாக பதிவிட்டதாகவும், தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.