செம்மரம் கடத்தல் ; திருப்பதி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு : 4 தமிழர்கள் கைது
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தப்படும் சம்பவம் நடப்பதும், ஏராளமானோர் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
ஏற்கனவே, செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள், ஆந்திர மாநில வன காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், திருப்பதி அருகே உள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் அங்கு விரைந்தனர். அப்போது 40க்கும் மேற்பட்டோர் அங்கு மரம் வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட அவர்கள், அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதனைக் கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். மேலும், போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களை எச்சரிக்கும் வகையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இருந்தாலும், அதில் 36 பேர் தப்பி விட்டனர். 4 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.