1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (08:41 IST)

ராமர் கோவில் பாக்கணுமே.. பொழுதுக்குள்ள..! – அனுமதி அளித்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை!

Ram Temple
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, 2020ம் ஆண்டில் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். ராமர் கோவில் பணிகளுக்காக ராமஜென்ம பூமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு ரூ.1800 கோடி மதிப்பில் கோவில் கட்டுமான பணிகள் வேகமாய் நடந்து வருகிறது.

இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுசெயலாளர் சம்பந்த்ராய் “ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. கட்டுமான பணிகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன.


2023 டிசம்பருக்குள் கோவிலின் தரைதளம் முழுவதும் தயாராகிவிடும். 2024 ஜனவரி மாதம் 14ம் தேதி மகர சங்கராந்தி நாளில் கோவில் கருவறையில் ராமர் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

பிறகு அதே மாதத்தில் பொதுமக்கள் தரிசனத்திற்காக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு ஏப்ரல் வாக்கில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ராமர் கோவில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited By Prasanth.K