கடைசி அமைச்சரவை கூட்டத்தை நடத்தும் மன்மோகன்சிங்
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இம்மாதம் 16 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், 17 ஆம் தேதி மன்மோகன் சிங் அலுவலகத்தில் இருந்து வெளியேறுகிறார்.
இந்நிலையில், தமது 10 ஆண்டுகால பிரதமர் பதவியின் இறுதி அமைச்சரவை கூட்டத்தை இன்று மன்மோகன் சிங் நடத்துகிறார்.
இக்கூட்டத்தில் மருந்துத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக விவாதித்து அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடைசி அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சரவை அதிகாரிகளுக்கு பிரதமர் மன்மோகன் தமது இல்லத்தில் பிரிவு உபச்சார விருந்து அளிக்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்க்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளை சிறப்பு விருந்து அளிக்கிறார். அப்போது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் , மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட நினைவுப் பொருள் ஒன்று அவருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.