1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2016 (09:22 IST)

நாட்டின் 3 துறைமுக பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும்: நிதின் கட்கரி

நாட்டின் 3 துறைமுக பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும்: நிதின் கட்கரி

குளச்சல் உள்ளிட்ட நாட்டின் 3 துறைமுக பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


 

 
இது குறித்து நிதின் கட்கரி கூறியதாவது:-
 
தமிழ்நாட்டில் குளச்சல், மகாராஷ்டிரா மாநிலத்தில் வாத்வான், மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சாகர் ஆகிய 3 புதிய துறைமுக பணிகளுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடிவரை முதலீடு தேவைப்படுகிறது.
 
இந்த பணிகளுக்கான டெண்டர், மார்ச் மாதத்துக்குள் வெளியிடப்படும். ஏப்ரல், மே மாதத்தில் துறைமுகப் பணிகள் தொடங்கும்.
 
தற்போது, நீர்வழித்தடங்கள் வழியான சரக்கு போக்குவரத்து 3.5 சதவீதமாக உள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குள், இதை 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
நடப்பு நிதியாண்டில், 12 பெரிய துறைமுகங்களும், 3 சிறிய துறைமுகங்களும் ரூ.6 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த பணம் முழுவதும் துறைமுகங்களை நவீனமயமாக்குவதற்கும், கணினி மயமாக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.
 
சுற்றுச்சூழல் பெரிய பிரச்சினையாக தற்போது இருப்பதால், சுத்தமானதும், மலிவானதுமான திரவ இயற்கை எரிவாயு மூலம் கப்பல்களை இயக்க நாம் கவனம் செலுத்த வேண்டும்.
 
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆற்றுப்படுகைகளை தூர்வாரும் பணியை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளது.
 
இந்த திட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
விரைவில் இது குறித்த கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். முக்கிய ஆறுகளின் குறுக்கே செல்லும் 111 நீர்வழித்தடங்களை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
 
மீனவர்கள், கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான படகுகளை வாங்க வேண்டும்.
 
அவர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும். ஆனால், அசல் திருப்பிச் செலுத்தும்வரை, அவர்கள் பிடிக்கும் மீனில் ஐந்தில் ஒரு பகுதியை அரசுக்கு கொடுத்துவிட வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார்.