வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ்கியான்
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2019 (14:50 IST)

’பிரதமர் மோடியின் ராஜதந்திரம் : தமிழகத்தில் பாஜக ஆட்சி ?ஆட்டம் கண்ட எதிர்க்கட்சிகள்…

தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற  இடமான மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி  மற்றும்  சீன அதிபருக்குமான  வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்று முடிந்தது.
 

இந்நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற அர்ஜூனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய்  உருண்டை பாறை, குடைவரை கோயில்கள் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். அப்போது பிரதமர் மோடி இந்த இடத்தின் வரலாற்றுப் பெருமைகளைப் பற்றி ஜின்பிங்குக்கு விளக்கினார்.

பின்னர், இருவரும் நாட்காலியில் அமர்ந்து கொண்டு, இரு நாட்டின் நட்புறவு, பாதுகாப்பு விவகாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைக்குறித்து பேசியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் , சீன அதிபருடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது, பிரதமர் மோடி தான் வழக்கமாக அணியும் குர்தாவுக்குப் பதிலாக தமிழர்களின் பாரம்பரிய வேட்டி,சட்டை, துண்டு என அணிந்து தமிழராகவே மாறியிருந்தார்.

இந்நிலையில், வழக்கம் போலவே இன்று தமிழகத்தில் கால் வைத்துள்ள மோடிக்கு ’கோபேக் மோடி’ என டுவிட்டரில் டிரெண்டிங் செய்தனர்.

மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும், பாஜக தலைவர்கள் என்று மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமருக்கே ஏன் இந்த எதிர்ப்பு எனக் கேள்வி எழும்புவது வடமாநிலத்திலுள்ள ஊடகங்களில் மற்றும் அங்குள்ள அரசியல் தலைவர்களின் கேள்வி ! ஆனால் இதற்கான பதில்கள் பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காமல் மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்றதை வைத்தே கணித்துக் கொள்ளலாம்.
 

பாஜகவின் சார்பில்  சென்ற மக்களவைத் தேர்தலில் ஒரு மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்தார்.ஆனால் இம்முறை இரு மத்திய அமைச்சர்கள்  ஜெய்சங்கர் , நிர்மலா சீதாராமன் கிடைத்துள்ளனர். ஆனால் இதனால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் எனக் கேள்வி எழுப்பி வருவதுபோல  சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.

சுறுக்கமாக சொல்ல வேண்டுமானால், சென்ற ஆட்சியில் மோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து பார்வையிடாமல் இருந்தது பெரிதும் தமிழக மக்களைப் பாதித்தது. நம்பர் ஒன் கோடீஸ்வரர் அம்பானியில் இல்லத் திருமணத்திலும், நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திலும் கலந்து கொண்ட மோடிக்கு தமிழர்கள் மேல் ஏன் கோபம் எதனால் இங்கு வருகை வரவில்லை என தமிழர்களும் கோபம் கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இப்படி தன் மீதான எதிர்மறை கருத்துக்களை புறந்தள்ளவே, மோடி தற்போது தமிழர் மற்றும் தமிழர் கலாச்சாரத்தின் மீது அக்கரை காட்டி தமிழர்களின் மனதில் இடம் பிடிக்க முயல்கிறாரோ எனவும் தமிழக அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எப்படி இதை எடுத்துக்கொண்டாலும் கூட  பிரதமர் மோடி தனது அரசியல் ராஜதந்திரத்தை வெற்றிகரமக நடத்திக்கொண்டுள்ளார் என்பதே அவருக்கும் மத்தியில் உள்ள அவரது தலைமையிலான  பாஜக ஆட்சிக்கும், அவரது ஆளுமைக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னர் என்ற பதவியைக் கொடுத்த மோடி, அடுத்து, சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்பை சென்னை மாமல்லபுரத்தில் நடத்தியுள்ளது, பலவீனமடைந்துள்ள பாஜகவை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான ஆயத்தமாகக் கூட இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.மேலும் ஏற்கனவே அதிமுக அரசை இயக்கிவருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் மக்களவை தேர்தல் முதற்கொண்டு உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்து வரப்போகும் சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவின் கை ஓங்கினாலும் ஆச்சர்யமில்லை என்றே அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகிறது.