புதன், 11 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (07:59 IST)

ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? நாளை முதல்வர்களுடன் ஆலோசனை செய்யும் பிரதமர்

ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? நாளை முதல்வர்களுடன் ஆலோசனை செய்யும் பிரதமர்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே. 3 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை அதாவது ஏப்ரல் 27ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யும் பிரதமர் மோடி, அதன்பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது.
 
ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை போன்ற கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஊரடங்கை மே 7-ந் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதேபோல் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களான டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிஷா மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டு என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளன. 
 
குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை என்றாலும் மத்திய அரசின் முடிவை பின்பற்றுவதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.