1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2015 (12:33 IST)

இறந்துபோன பொற்றோருடன் 2 நாட்கள் தவித்த ஒரு வயது குழந்தை

இறந்துபோன தன் பொற்றோரின் பிணத்துடன், அவர்களின் ஒரு வயது குழந்தை 2 நாள் பசிக்கு அழுது மயங்கிய சம்பவம் நெஞ்சத்தை உலுக்கியுள்ளது.


 

 
ஹைதராபாத் அருகே உள்ள ஹூக்கட் பள்ளி ஆல்வின் காலனியில் மஞ்சுநாத் என்பவர் அவரின் மனைவி மீனாட்சியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஹர்சவர்தன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் முதல் தளத்திலும், வீட்டு உரிமையாளர் கீழ் தளத்திலும் வசித்து வந்தார்கள்.
 
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருமாம். குழந்தை அழுது கொண்டிருந்தால் கூட, கண்டு கொள்ளாமல் இருவரும் சத்தமிட்டு எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். மூன்று நாட்களுக்கு முன்பு இருவருக்கும் வழக்கம்போல் சண்டை வந்திருக்கிறது. இது அடிக்கடி நடப்பதுதான் என்று அக்கம் பக்கத்தினர் கண்டு கொள்ளவில்லை.
 
ஆனால், இரண்டு நாட்களாக வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. குழந்தை அழும் சத்தம் மட்டும் கேட்டிருக்கிறது. பின் அந்த சத்தமும் நின்று விட்டது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் மேலே சென்று பார்த்துள்ளார்.
 
அப்போது கதவின் அருகே மீனாட்சி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார். பக்கத்து அறையில் மஞ்சுநாத் பிணமாக தொங்கியுள்ளார். தாயின் பிணம் அருகே குழந்தை மயங்கி கிடந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மஞ்சுநாத் மனைவியையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.
 
தாய் இறந்தது கூட அறிய முடியாத அந்த பிஞ்சுக் குழந்தை, பாலுக்கு இரண்டு நாட்கள் அழுது கொண்டே இருந்து, பின் மயங்கி சரிந்திருக்கிறது.
 
அந்த குழந்தையை அண்டை வீட்டுக்காரர்கள் பால் கொடுத்து காப்பாற்றினர். அந்த குழந்தையை தத்து எடுக்க பலர் முன்வந்தாலும், காவல்துறை இறந்து போனவர்களின் உறவினர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.