1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (13:43 IST)

நிறுத்தப்பட்ட உதவித்தொகை! சாப்பாட்டுக்கு வழி இல்லாத முதியவர் பரிதாப பலி!

ஆதரவற்ற முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் உணவுக்கே வழியில்லாமல் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மெலியபுட்டி பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்த 86 வயது முதியவர் சவராபாரி. மாமிடிகுட்டி என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவரான சவராபாரியின் மனைவி 15 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். குழந்தைகளும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்த சவராபாரி அரசு வழங்கிய ஆதரவற்ற முதியோருக்கான உதவித் தொகையை வைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆதரவற்ற முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான திட்டத்தில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கை ரேகை இல்லாததை காரணம் காட்டி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

இதனால் வருமானம் இன்றி, வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருந்த சவராபாரி, தனக்கு உதவித்தொகை வழங்க வேண்டுமென கேட்டு பல அரசு அதிகாரிகளையும் சந்தித்து பல அலுவலகங்கள் அலைந்துள்ளார். ஆனால் அவருக்கு உதவித்தொகை வழங்குதற்கான நடவடிக்கைகளை யாரும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்த அந்த ஏழை முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார். ஆதரவற்ற முதியவருக்கு நிதியுதவி வழங்காமல் பட்டினியால் அவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K