வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2016 (15:25 IST)

நேரில் ஆஜராகும்படி விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்

‘மதுபான ஆலை’ உரிமையாளர் விஜய் மல்லையா நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத்துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது.
 

 
பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன்பெற்றுள்ள ‘சாராய ஆலை அதிபர்’ விஜய் மல்லையா, அந்த கடனை திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பி விட்டார். இதையடுத்து விஜய் மல்லையாவிடம் இருந்து கடன்தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக அவருக்கு கடன் அளித்த அனைத்து வங்கிகளும் ஒன்றாக சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
 
இவ்வழக்கில், ‘கிங் பிஷர்’ நிறுவனம் மற்றும் விஜய் மல்லையா சார்பில் கடந்த மாதம் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சீலிட்ட உறையில் கடித வடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், செப்டம்பர் மாதத்துக்குள் கடன் அளித்த வங்கிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க விஜய் மல்லையா முன் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
இந்த கடிதம் தொடர்பாக, ஒருவாரத்துக்குள் பரிசீலித்து முடிவுசெய்யும்படி வங்கிகளை அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 
இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் மத்திய பொருளாதார அமலாக்கப்பிரிவுத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.