வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By ILAVARASAN
Last Updated : புதன், 21 மே 2014 (15:52 IST)

குஜராத் சட்டசபையில் மோடி உருக்கமான பேச்சு

வரும் 26 ஆம் தேதி பிரதமராக பதவியேற்க்கவுள்ளதால், குஜராத் சட்டசபையிலிருந்து மோடி இன்று விடை பெற்றார்.
 
குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
வருகிற 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் திறந்த வெளியில் மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.
 
நேற்று மாலை மோடி குஜராத் மாநிலம் புறப்பட்டுச் சென்றார். ஆமதாபாத்தில் தனது சொந்த சட்டசபை தொகுதியான மணிநகரில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசி குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
அவரை வழியனுப்புவதற்கான குஜராத் சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை காந்தி நகரில் கூடியது. இதில் நரேந்திரமோடி முதலமைச்சராக கலந்து கொண்டார்.
 
பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக அவரை குஜராத் சட்டசபை சபாநாயகர், அனைத்து கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து பேசினார்கள்.
 
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து மோடி உணர்ச்சிகரமான உரையாற்றினார். தனக்கு ஒத்துழைப்பு தந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், குஜராத் மாநில மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமாக பேசினார்.
 
அவர் பேசியதாவது:–
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. குஜராத்தை முன் மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

எல்லா மட்டங்களிலும் பிரச்சனை எழுந்தபோது குஜராத் மக்கள் எனக்கு பக்க பலமாக இருந்தார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோது என்னை வழி நடத்தியதே எதிர்க்கட்சி தலைவர்தான்.
 
நான் முதலமைச்சராக பதவி ஏற்றபோது, நிதி மற்றும் நில நடுக்க பிரச்சனைகளை சந்தித்தேன். ஊழலும் குஜராத்தில் மூழ்கி கிடந்தது. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்தார்கள்.
 
4 முறை என்னை முதலமைச்சராக்கினார்கள். நான் குஜராத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றேன். தற்போது குஜராத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
 
மத்தியில் ஆண்ட முந்தைய அரசு பல்வேறு பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல், திட்டங்களை முடிக்காமல் பாதியில் விட்டுச் சென்றுள்ளது. முந்தைய தலைவர்கள் எனது சாதனைகளைப் பார்த்து பெருமிதம் அடைவார்கள்.
 
எல்லா பணிகளின்போதும் ஜனநாயக முறையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் அனைத்து கோரிக்கைகளுக்கும் பதில் கிடைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
 
சி.ஏ.ஜி. அறிக்கையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. வேற்றுமைகள் இருந்தாலும் முன்னேற்றத்தை நோக்கி நாம் நடைபோடுவோம்.
 
ஜனநாயகத்தில் நல்ல ஆட்சி நடத்துவதுதான் முக்கியம். அந்த வகையில் நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று நரேந்திர மோடி பேசினார்.