வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (06:15 IST)

பஞ்சாப்பின் உண்மையான பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும்: ராஜினாமா குறித்து கமல்நாத் விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தின் உண்மையான பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எனது பதவியை ராஜினாமா செய்தேன் என்று கமல்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
 

 


 
உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இரு மாநிலங்களிலும் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களாக முன்னாள் மத்திய மந்திரிகளான குலாம் நபி ஆசாத், கமல் நாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 
 
பஞ்சாப் மற்றும் அரியானா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கமல்நாத்தை, அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்த விமர்சனங்களை தொடர்ந்து கமல்நாத் நேற்று ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
 
நான் சோனியா காந்திக்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு கட்சியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இந்த விஷயத்தை யாரும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க கூடாது என்று கூறினேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 
 
மேலும் பஞ்சாப்பின் முக்கிய பிரச்சனைகளான போதை பொருள் பயன்பாடு, விவசாயிகளின் பரிதாப நிலை மற்றும் மோசமான நிர்வாகம் ஆகிய உண்மையான பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக பதவியை ராஜினாமா செய்தேன் என்று கூறினார்.