1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:07 IST)

India’s coal shortage - 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்?

நிலக்கரி தட்டுபாடு தொடர்ந்தால் இந்தியாவில் 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 
கோடை வந்தாலே மின்வெட்டு என்ற வார்த்தை நாடு முழுவதும் மக்கள் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் தற்போது நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதால் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளது. ஆம், நாடு முழுவதும் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
 
முன்னதாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதிபட கூறியது.  

 
 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்: 
ஆனால் இப்போது நாடு முழுவதும் மொத்தம் உள்ள 178 அனல் மின் நிலையங்களில்  100 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும். அந்த 12 மாநிலங்களில் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சட்டீஸ்கர்,  கர்நாடகா, ஆந்திரா, அரியானா, பீகார், ஜார்க்கண்ட், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் அடங்கும். 
 
நிலக்கரி தட்டுபாட்டுக்கு காரணம் என்ன? 
நிலக்கரி தட்டுபாட்டுக்கு காரணம் மத்திய அரசின்  மின்சாரம், நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே போதிய  ஒத்துழைப்பு இல்லாததேதான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மின்தேவையில் 53% அனல்மின்  நிலையங்களே தரும் நிலையில், தற்போது நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு மின்சார உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.