கேம்பஸ் இண்டர்வியூ பெயரில் மோசடி - முக்கிய நிறுவனங்களுக்கு ஐஐடி தடை
9 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் நேர்முக வளாகத் தேர்வில் கலந்து கொள்ள மும்பை ஐ.ஐ.டி தடை விதித்துள்ளது.
புதுடெல்லியை மையமாக கொண்டு செயல்படும் பெப்பர்டேப் மற்றும் சீனாவை சேர்ந்த ஜான்சன் எலெக்ட்ரானிக் நிறுவனம், ஜிபிஎஸ்கே மற்றும் கேஷ்கேர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை பணியாணை வழங்கிவிட்டு [Appointment order] பின்னர் அந்த உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டதால் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இண்டஸ் இன்சைட் ஹூஸ்டனை மையமாக வைத்து செயல்படும் அமெரிக்க நிறுவனமான லெக்இனோவா நிறுவனம் பணியில் சேர்வதற்கான தேதியை தள்ளி வைத்து கொண்டு இருப்பதால், அந்நிறுவனத்திற்கு ஒரு வருட தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லெகார்டே புர்னெட் என்ற நிறுவனம் போலி பணியாணை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீரா ஹூனார் என்ற நிறுவனம், ஆட்களை தேர்வு செய்து, வேறு நிறுவனத்தில் பணியமர்த்தியதால் அந்த நிறுவனத்திற்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் நடவடிக்கை காரணமாக 135 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்று தெரிகிறது.