1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (11:03 IST)

நான் கருப்பு.. குழந்தை எப்படி சிவப்பா பிறந்தது! – சந்தேகத்தில் குழந்தையை கொன்ற கணவன்!

ஆந்திராவில் தனக்கு பிறந்த குழந்தை சிவப்பாக இருந்ததால் மனைவி மீது சந்தேகப்பட்டு குழந்தையை கணவனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கா முரளி. இவருக்கு சமீபத்தில் வீணா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பிறகு இவர்கள் நன்னூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

ரங்கா முரளி கருப்பு நிறமாக இருந்தாலும் அவருக்கு ஆண் குழந்தை சிவப்பாக பிறந்ததால் அவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்துள்ளார். இதனால் அடிக்கடி மனைவியிடம் குழந்தை குறித்து சண்டை போட தொடங்கியுள்ளார். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த ரங்கா முரளி, தனக்கு பிறக்காத குழந்தை இருக்கக்கூடாது என்று கூறி பூட்டால் குழந்தையை தாக்கியுள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

அதை தொடர்ந்து வீணாவையும் அவர் கொல்ல முயன்றுள்ளார். அதற்கு சத்தம் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் ரங்கா முரளியை கைது செய்துள்ளதுடன், குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.