போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஹர்திக் படேல் கைது
சூரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஹர்திக் படேலை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் பட்டேல். இந்தக் கோரிக்கையை முன்வைத்து பட்டேல் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.
தடியடி, கண்ணீர் புகைக்குண்டு என வன்முறையில் ஈடுபட்ட பட்டேலின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
தங்கள் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை வழங்காவிட்டால் மீண்டும் பேரணி நடத்தப்போவதாக ஹர்திக் பட்டேல் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி குஜராத் முதல் அமைச்சர் அனந்திபென் பட்டேலை ஹர்திக் பட்டேல் நேரில் சந்தித்து பேசினார். அப்போது 10 நாட்களில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று முதல் அமைச்சர் உறுதி அளித்ததாக ஹர்திக் பட்டேல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தடையை மீறி சூரத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஹர்திக் படேலை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.