செவ்வாய், 11 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (09:28 IST)

ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது: அ.தி.மு.க எதிர்ப்பு, தி.மு.க ஆதரவு

ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது: அ.தி.மு.க எதிர்ப்பு தி.மு.க ஆதரவு

பல்வேறு தடைகளைக் கடந்து திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு  விவாதம் நடைபெற்றது. ஜி.எஸ்.டி மசோதாவால் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் பெருகும், இந்த மசோதாவால் மத்திய அரசை விட மாநில அரசிற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும், வரி ஏய்ப்புகள் குறையும் என்று மசோதாவில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசினார். இந்த மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


 


அ.தி.மு.க. எம்.பி. நவநீத கிருஷ்ணன் பேசுகையில், ”ஜி.எஸ்.டி. மசோதா அரசியல் சட்டத்திற்கு எதிரானது, இது அமலுக்கு வந்தால் தமிழக அரசுக்கு கணிசமான அளவில் வருவாய் இழப்பு ஏற்படும், மாநில அரசுகளின் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஈடு செய்யப்படும் என்பதை ஏற்க முடியாது, என்றார். மேலும், அ.தி.மு.க. கோரிய திருத்தங்களை மசோதாவில் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே, விவாதம் முடிவடைந்து வாக்கெடுப்புக்கு தயாராகும்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் ஜி.எஸ்.டி. மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, அவையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட 197 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எதிர்ப்பின்றி மசோதா நிறைவேறியது. இதையடுத்து திருத்தப்பட்ட மசோதா மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.