1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (12:09 IST)

தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்.. 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி..!

சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் மிசோரம் தவிர 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது என்பதை பார்த்தோம். இன்று காலை 9 மணி நிலவரப்படி சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் பாஜகவும்  முன்னணியில்   இருந்தன.  இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக  சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளில் 71 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் கிட்டத்தட்ட காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து விட்டது என்று சொல்லலாம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜகவும், 41 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. 46 தொகுதிகள் இருந்தால் இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தற்போது முன்னிலையில் உள்ள தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றாலே அங்கு ஆட்சி அமைத்துவிடும்.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்வது உறுதியாகிவிட்டது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 157 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 69 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 199 தொகுதிகளில் 119 தொகுதிகளில் பாஜகவும் 69 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. எனவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவும் தெலுங்கானா மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva