1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (14:17 IST)

மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அனுகுங்கள்: இலங்கை பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

இலங்கை பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இரவு இந்தியா வந்தார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அவர் இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் இன்று மதியம் பிரதமர் மோடியை சந்தித்தார். இதில் மீனவர் பிரச்சனை உட்பட பல்வேறு விசயங்களை விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்புக்கு பிறகு நண்பகல் 1 மணியளவில் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி இரு நாட்டு வர்த்தக உறவுகள் குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் ஆலோசித்தோம் என்றார்.

மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது எனவும், இந்திய மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்க வருகிறார்கள் என்பதை கவனத்தில் வைக்குமாறு இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இரு நாட்டு மீனவர் அமைப்புகளும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இலங்கை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைய அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என மோடி தெரிவித்தார்.