வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (13:49 IST)

இறந்த மாடுகளை இனி தூக்க மாட்டோம்! - தலித் அமைப்புக்கள் வேலைநிறுத்தத்தால் அழுகி நாறும் கால்நடைகள்

குஜராத் மாநிலத்தில், இறந்த கால்நடைகளை இனி தூக்கிச் சுமக்கவோ, அவற்றை அப்புறப்படுத்தவோ மாட்டோம் என்று தலித் அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

 
பசுவைக் கொன்று அதன் தோலை உரித்ததாகச் சொல்லி, குஜராத் மாநிலம் உனா நகரில் தலித் இளைஞர்கள் 4 பேரை, ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள், நடுரோட்டில் வைத்து இரும்புக் கம்பிகளால் அடித்துத் தாக்கினர்.
 
அவர்களை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர். அவமானப்பட்ட அந்த தலித் இளைஞர்கள் விஷமருந்தி தற்கொலைக்கும் முயன்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
குஜராத் மாநிலத்தில் தலித் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் இறங்கினர். அதனொரு பகுதியாக, ’தலித் மானவ் அதிகார் இயக்கம்’ என்ற குஜராத்தின் முக்கியமான தலித் அமைப்பின் தலைமையில், பல்வேறு தலித் அமைப்பினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால் மாவட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு 200 கால்நடைகளின் தோல் உரிப்பு உள்ளிட்ட வேலைகளை, தங்களின் பணியாளர்களை வைத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
”எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும்; எங்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் பற்றி உனா சம்பவத்துக்கு பிறகே மக்களுக்கு தெரியவந்துள்ளது.
 
தினப்படி மாட்டுத் தோல் உரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தகைய வன்முறையை சந்தித்து வருகின்றனர். அரசு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வரை வேலை நிறுத்தம்தான்” என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
 
சுரேந்திர நகரில் கால்நடைகளின் தோல் உரிக்கும் பணியையும், அப்புறப்படுத்தும் பணியையும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களை வைத்தே செய்து வருகின்றனர்.
 
இதனால் மாநிலம் முழுவதும், இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்த முடியாமல், சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகிகள் திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.