வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (13:47 IST)

அமெரிக்காவுக்கு போய் ஓட்டு கேட்ட மோடி! – கலாய்த்து தள்ளிய காங்கிரஸ் பிரமுகர்

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்று அதிபர் ட்ரம்ப்புக்காக ஓட்டு கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா பொதுக் கூட்டத்திற்காக 7 நாட்கள் பயணமாய் கடந்த 21ம் தேதி அமெரிக்கா பயணமானார். நேற்று அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த “ஹவுடி மோடி” விழாவில் கலந்து கொண்டார் மோடி. அவருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் கலந்து கொண்டார்.

அங்கு மக்களிடம் பேசிய மோடி “ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவுடனான அமெரிக்காவின் நெருக்கம் கூடியுள்ளது. ட்ரம்ப் அமெரிக்காவை மிக சிறப்பான பாதையில் கொண்டு செல்கிறார். அடுத்த முறையும் அவர் ஆட்சிக்கு வந்தால் பல நன்மைகளை செய்வார். அடுத்த முறையும் ட்ரம்ப் அதிபராக வேண்டும்” என பேசியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களிடம் இந்தியாவின் வளர்ச்சி, அமெரிக்க வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு குறித்து மட்டும் பேசியிருந்தால் போதுமே! எதற்காக அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்து 50000 மக்கள் கூடியிருக்கும் இடத்தில் பேச வேண்டும் என மோடியின் பேச்சுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹவுடி மோடி நிகழ்ச்சி மூலம் மறைமுகமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு வாக்கு சேகரிக்கிறார் மோடி என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினரும், முன்னாள் கேபினேட் அமைச்சருமான ஆனந்த் சர்மா “பிரதமர் மோடி அவர்களே நீங்கள் அமெரிக்காவிற்கு இந்திய பிரதமராக சென்றிருக்கிறீர்கள். அமெரிக்க தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.