1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (08:49 IST)

வாட்ஸ் அப்பையும் பாஜக கண்ட்ரோல் பண்ணுது! – காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது வாட்ஸ் அப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை ஃபேஸ்புக்கில் பாஜகவுக்கு எதிரான பதிவுகள் நீக்கப்படுவதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக் செயல்படுவதாகவும் வெளியான செய்தியை மேற்கொள் காட்டி காங்கிரஸ் பாஜக மீது குற்றச்சாட்டுகளை வைத்து வந்தது.

இந்நிலையில் தற்போது டைம்ஸ் பத்திரிக்கை வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி சிவநாத் துக்ரல் பாஜகவின் விசுவாசி என்றும், தொழில்முறையில் இதற்காக பாரபட்சத்துடன் நடந்து கொண்டுள்ளார் என்றும் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதை மேற்கோள் காட்டிய காங்கிரஸினர் இந்தியாவில் வாட்ஸ் அப் உபயோகிக்கும் 40 கோடி மக்களின் விவரங்கள், வங்கி கணக்குகளை பாஜகவுடன் வாட்ஸ் அப் நிறுவனம் பகிரவில்லை என்பதற்கு என்ன நிச்சயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.